skip to content

மாணிக்கவாசகன்

அருளாளன் (மாணிக்கவாசகன்)

அருளாளன் அத்தன் அகமாரும் ஆனன்
.. அனலாடி ஆலன் அவனே
குருவாக நின்று குருதீக்கை தந்து
.. கொடையாக ஈந்த தமிழால்
திருவாத வூரன் சிவநேச செல்வன்
.. செறிவான சைவ நெறியான்
தருவாகி வையந் தனைகாக்கத் தந்த
.. தமிழ்ஞான நூட்கள் பழமே (1)

அரிமர்த்த மன்னன் அவைகேட்கும் சேவை
.. அதைசெய்யு மன்பன் ஒருநாள்,
பரிவாங்கத் தந்தப் பணங்காசைக் கொண்டு
.. பரமேசன் கோயில் அமைத்தான்;
திருநோக்கம் ஏதும் தெரியாத மன்னன்
.. திருமானை தள்ள சிறையில்,
நரியோடு நம்பன் நகரோடி அன்பன்
.. நலங்காத்து நின்ற தழகே (2)

உருகாத நெஞ்சும் உளமாற வேண்டி
.. உலகாளும் வண்ணம் ஒருநூல்
திருவாச கத்தை தினமோதி நாமும்
.. திகட்டாத இன்பம் தெளிவோம்;
பருகாத தேனும் பயிலாத ஞானம்
.. பழகாத யோகம் பலவாய்
தருவானே தந்து தழலாடி பாதம்
.. தனில்சேரும் இன்பும் தருவான் (3)

அருள்தேடும் நெஞ்சம் அடைகின்ற தஞ்சம்
.. அவன்பாடல் ஒன்றில் அறிவாய்;
அரிதான யுத்தி அநுபோக சுத்தி
.. அதனோடு மேலும் பலவாய்
ஒருநூறு பாடல் உயர்ஞான தேடல்
.. உருவான பத்தில் வரமாய்
பெருமானைப் பாடி பெருஞ்ஞானம் தேடிப்
.. பெறுகின்ற பேறும் புரிவான் (4)

குருசக்தி ஒன்றின் நவசக்தி கொண்டு
.. குறையற்று பூமி குலுங்கும்,
ஒருசக்தி நின்று மறுசக்தி தன்னை
.. உயர்வாகச் செய்தல் விதியே;
இருளென்ற மாயை இனியில்லை காலை
.. இசைபாடி உள்ளம் எழும்பத்
தெருதோறும் சென்று தினம்பாடத் தந்த
.. திருவெம்பா வைநம் திருவே (5)

விரிவோலை கொண்டு விடையேறி ஆணி
.. விரைந்தோட ஏட்டில் எழுதும்
அருள்பெற்ற வாசன் அவன்கேட்ட வண்ணம்
.. அகக்கோவை ஒன்றை அருள்வான்;
பெருமானின் எண்ணம் புரியாது நின்ற
.. பெரியோர்கள் வந்து வினவ
பொருளென்று தில்லைப் பெருமானைக் காட்டிப்
.. பெருஞ்சோதி தன்னுட் புகுவான் (6)

18/07/2010 அன்று நங்கைநல்லுர் பாரதி கலைக்கழகம் நடத்திய 'அருளாளர்கள்' எனும் கவியரங்கத்தில் பாடியது.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.