skip to content

பற்று அம்பலத்தான் பதம் - தில்லை

தலவுலா (1. பற்று அம்பலத்தான் பதம் - தில்லை)

-----

ஆடுமுன் தாளிரண்டும் அம்பலத்தே ஆடுமெனின்
தேடுமென் நெஞ்சத்தை சேராதோ - பாடிநிதம்
உன்னைப் பணிவேன் உமைநேசா, இத்தருணம்
என்பாப் பொருளாய் இரு (1)

-----

இருமாதர் மெய்யோ டிணைந்தோர் உருவாய்
திருக்கோலம் பூணுமுயர் தில்லை - நிருத்தனே
சாரமாய் ஈங்கார் சதிரொலியில் என்குதலை
சேருமோ உன்றன் செவி (2)

(சதிர் - நாட்டியம்; குதலை - மழலைச்சொல்)

-----

செவியமர்ந்துன் ஐந்தெழுத்து சீர்கொடுக்க நெஞ்சின்
கவிபடைத்தேன் நின்றாள்நீ காண - குவிபதத்தால்
தோடெடுத் தாடிநிற்கும் சோதியா, கீழ்கிடக்கும்
ஏடெடுத் தென்பா டெரி (3)

-----

எரிவிழியோய், ஏந்திவந்த எட்டாறில் தில்லை
கரிகொடுத்த நூலொன்று கண்டாய் - தருவதற்காய்
உன்னைத் துதிசெய் தொருநூறு பாவெழுத
என்நெஞ்சிற் கொண்டேன் இலக்கு (4)

குறிப்பு: தில்லையின் படிகளிலுள்ள யானைச் சிலைகளுள் ஒன்று, படைக்கப்பட்ட பதினான்கு சாத்திரங்களில் ஒன்றைத்தன் தும்பிக்கையால் எடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்படியார் ' என்ற பெயர் பெற்றது

-----

இலக்காய் உனைகொண்டேன் இங்கெனக்காய் தில்லை
கலக்கமினி யென்வாழ்விற் காணேன் - உலவிநிதம்
காலத்தை ஓட்டிப்பூ கண்டுப்பின் சாமத்தே
மூலத் தொடுங்கல் முறை (5)

குறிப்பு: அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் தில்லையின் மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்

-----

முறைகண்ட மூவரவர் முன்னோர்நாள் தில்லை
இறைஉன்னை யேத்திப்பா ஈந்தார் - பிறைகொண்டோய்,
முன்னோர் வழியில் முனையுமென் னுள்ளத்தால்
சொன்னேன், சுவையோநீ சொல் (6)

-----

சொற்கோயில் ஒன்றமைத்துச் செய்கின்றேன் பாமுழுக்கு,
பொற்கோயில் கொண்டோர் புறத்திங்கு - நிற்காது
முக்காலம் ஆடும் முதல்வாநின் றாளென்இல்
எக்காலம் காணும் இனி (7)

-----

இனிப்பார் இதயமாய் ஈங்கார் விராட்டா,
தனியார்? துணைவுன் தயையே - பனிமலருள்
தேனாய் திருநடனம் செய்வோனே என்கவியாய்
ஆனாய், சுவைநின் அருள் (8)

-----

அருள்தேடி தில்லையில் அன்றுகவி பாடி
குருஏற்றி வைத்தார் கொடியை - உருகியதைப்
பூணுமோர் பொன்னாய்ப் புகழ்ந்தேற்கும் உன்நெஞ்சம்
காணுமோ என்றன் கவி (9)

குறிப்பு: உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம் தில்லை ஆகும்

-----

கவியியற்றி உன்பதம் காத்துக் கிடப்பேன்
புவியியக்கும் தில்லைப் பெரும - குவிகரத்தால்
கேட்குமென் விண்ணப்பம் கேளாயோ நெஞ்சிரங்கி
ஆட்கொண்டென் உள்ளமைந் தாடு (10)

-----

ஆடிநிதம் வாழ்வெலாம் ஆட்டம் பலகண்டும்
கூடுபலன் யாதுகண்டாய்? கூறவன்பேர் - கேடுலகில்
முற்றுவினை நீங்க முனைந்தோர் முறையேனும்
பற்றம் பலத்தான் பதம்

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.