இல்வாழ்க்கை
ஆவன அனைத்தும் கற்றே
.. அன்புசேர் நகரில் வாழ்வோர்,
பூவனம் வசித்து யோகப்
.. புண்ணியத் தவத்தில் ஆழ்வோர்,
தேவையைத் துறந்த யோகி,
.. மூவரும் அறத்தைக் காக்கச்
சேவையாய் தெரிந்து செய்வான்
.. செவ்விய நல்இல் வாழ்வான் (1)
அல்வழி துறந்து வாழும்
.. அகத்துறை துறவி யார்க்கும்,
அல்லலில் உழன்று வாழும்
.. அருளிலா உலகத் தார்க்கும்,
செல்வழி மரணம் என்றோர்
.. சேய்துணை இல்லா தார்க்கும்,
இல்வழி இணைந்து வாழ்வான்
.. இயன்றதைச் செய்தே வாழ்வான் (2)
தென்புலத்(து) அமைந்த ஆதித்
.. தோற்றுவாய், இருந்து மாண்டோர்,
முன்னவர், முழுதாய் யாவும்
.. முடித்திடும் முழுமைத் தெய்வம்,
தன்னிடம் விருந்தாய் வந்தோர்,
.. தன்குடி, தனது சுற்றம்,
என்னுமிந் நால்வ ரோடுத்
.. தன்னையும் ஓம்பல் நன்றே (3)
செய்பழி தவிர்த்துத் தான்செய்
.. செயற்றனில் பாவம் சேரா(து)
உய்வழி என்றும் நன்றாய்
.. உயர்குணத் தமையப் பெற்ற
மெய்வழி தருமச் செல்வம்
.. வையகம் பகிர்ந்து வாழ்வான்;
செய்யுமிச் செயல்இல் வாழ்வான்
.. செலும்வழி செழிக்கச் செய்யும் (4)
பண்புடன் ஆணும் பெண்ணும்
.. பயில்வதே நல்இல் வாழ்க்கை,
பண்பெனப் படுவ திங்கே
.. பழகிடும் அன்பே ஆகும்;
எண்செயல் இவற்றில் என்றும்
.. இடைவிடா தறமே வேண்டும்,
மண்ணதிற் பிறந்த பேறாய்
.. மனிதனின் பயனும் ஈதே (5)
சொல்லதின் பொருளைத் தேடித்
.. தொலைந்திடும் நிகண்டும் உண்டோ?
புல்வெளிப் பரப்பில் வாழும்
.. பசுவதா பசியால் வாடும்?
சில்லெனும் நதியின் மீனா
.. தணித்திடா தாகம் என்னும்?
நல்லறம் நிறைஇல் வாழ்வின்
.. நன்றெது? பிறகென் தேடல்? (6)
ஆழியின் அலைமேல் பெய்யும்
.. அடர்மழை பயன் தராது;
மேழியால் உழுதும் என்ன,
.. மேருவில் விளைச்சல் உண்டோ?
வாழிடத் தியல்பாய் இல்லம்
.. வாழ்பவன் வாழு கின்றான்,
சூழுமச் சார்ந்தோர் மூவர்
.. தொடர்வரே அவன்றன் பாதை. (7)
தூய்மனங் குவித்தே ஆற்றும்
.. துறவியர் தவத்தைக் காத்தவ்
ஆய்வழி அறத்தைப் பேணி
.. அன்பொடு வாழ்இல் வாழ்வே
ஓய்வெதும் விரும்பா வண்ணம்
.. உதவிகள் இல்லாக் காட்டிற்
போய்த்தவம் யோகம் யாவும்
.. புரிதலின் உயர்ந்த தாமே (8)
இன்பமாய் இணைந்து ஒன்றாய்
.. இயைந்திட இருவர் தங்கள்
அன்பினால் வாழ்இல் வாழ்க்கை,
.. அறமென அதையே காண்க;
துன்பமே தொடரும் கான்வாழ்
.. துறவிகள் தம்மை யாரும்
வன்மையாய் வசையா வாழ்வு
.. வாழ்ந்திடின் அதுவும் அஃதே (9)
இல்லறம் தன்னில் வாழும்
.. இயல்பினார் இவர்தம் வாழ்வின்
நல்வழி நாடிச் சென்று
.. நலமுற வாழ்தல் நன்றே;
செல்வரிவ் வையம் விட்டுத்
.. தேவரின் உலகுக் கோர்நாள்;
சொல்வரே புகழ்ந்தி வர்க்குச்
.. சொத்தென அமையும் அஃதே (10)
