skip to content

2. அண்ணாமலையான் அருள் - திருவண்ணாமலை

தலவுலா (2. அண்ணாமலையான் அருள் - திருவண்ணாமலை)

-----

பதங்கண்டான் அன்று பரந்தாமன் ஈங்கண்
அதங்கண்டான் ஆணவத்தால் அஞ்சன் - நிதமொன்றாய்
பாப்பாடி நின்னைப் பணிந்தேன் அருணேசா
காப்பாயென் குற்றங் களைந்து (1)
அஞ்சன் = பிரமன்

-----

களைமலிந்த வாழ்வின் கரையென்று காண்பேன்
விளைஉயர்வென் வாழ்வில் விரைந்து - துளையிருந்தென்,
காற்றுலா வாராது காணா திசை;குழலென்
ஊற்றுநீ வந்துயிர் ஊட்டு (2)

-----

ஊட்ட அமுதுண்ட உத்தமருக் கன்றறந்தான்
காட்டியருள் செய்தாய் கண்ணுதலா - பாட்டின்நான்
கேட்கும் பொருளுண்டு கீற்றொளியோய் என்றுமென்
ஏட்டின் பொருளாய் இரு (3)

-----

இருக்கும் மலையாகி ஏத்துவர்தம் இன்பம்
பெருக்கும் இணையில் பெரும - வருநாள்
குறையாதுன் கோலவெழில் கூறும் வரம்வேண்டும்
நிறையாயோ நெஞ்சுன் நினைப்பு (4)

-----

நினைக்கின் அருளும் நெடும்பதி நின்றிங்
குனைத்துதித்தேன் உள்ளத் துமையோய் - வினையிழக்க
வேண்டியுன் தாட்கண் விழைகின்றேன் என்னூழும்
மாண்டறத் தாவோர் மருந்து (5)

-----

மருந்தாகி என்னுளத்தார் மாசறுத் தென்றன்
திருந்தாவன் நெஞ்சைத் திருத்து - விருந்தாக
நின்னைப் புகழ்ந்தோர் நெடும்பாடல் பாடுதற்காய்
என்னுட் தமிழை எழுது (6)

-----

எழுத்தைந்தால் ஈர்க்குமுனை எண்ணாவன் நெஞ்சத்
திழுக்கார் எனக்கேதிங் கின்பம் - அழுக்குமனம்
தேக்கும் பழியாயும் தேய்த்துத் தொடர்வினையும்
நீக்கியெனை என்றேற்பாய் நீ (7)

-----

நீயே ஒளியாகி நிற்கின்ற இப்பதியில்
நாயின் கடையனாய் நான்நிற்க - தாயினும்
அன்பூட்டும் ஆதரவே அண்ணா மலையோனே
என்றோடும் என்வினைஇ யம்பு (8)

-----

இயம்புமென் துன்பமற ஏத்திப் பணிவேன்
சுயம்புநிலை தெய்வமே சோதீ - வியனுலகில்
சேர்த்த வினையாவும் தீர விழைந்துன்னைப்
பார்த்துப் படிக்கின்றேன் பாட்டு (9)

-----

பாடுமெனை மென்மேலும் பாடச்செய்; ஊழ்விரிக்கும்
பாடுமெனை அண்டாப் படியுஞ்செய் - கூடடைக்கும்
வெற்றுயிர் வாழ்க்கையில் வேண்டுமுன் எண்ணமென்றுப்
பற்றினேன் இன்றுன் பதம் (10)

-----

பதந்தொடரும் நீழலாற் பாரிற் பயனென்?
விதவிதமாய் யாக்கைவுயிர்க் கேனோ - நிதம்முனைந்
தெண்ணத்தைச் சீர்படுத்தி ஏத்த உனையருகும்
அண்ணா மலையான் அருள்

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.