சுதந்திர நினைவுகள்...
ஆய்ந்தே அழிவை அணுகாமல்
.. ஆயு தமற்ற சுதந்திரத்தை
வேய்ந்த வெள்ளை உளத்தோரின்
.. வெற்றித் திருநாள் நினைவதுவே
தேய்ந்து போய்ச்சிந் தனையற்றுத்
.. தேசப் பற்றை நினையாமல்
ஓய்ந்து போய்நாம் மரம்போலே
.. உணர்வில் லாமல் கிடக்கின்றோம் (1)
வெற்று நெஞ்சம் கொண்டோர்க்கா
.. வெற்றித் திருநா டவர்தந்தார்?
சற்றே வளைத்துச் சத்தியத்தைத்
.. தன்பால் இழுப்பர் சதியாளர்,
முற்றும் தெரிந்தும் முனிவர்போல்
.. மொழியா நிலையில் வெறுங்கூடாய்
அற்றுப் போய்நம் உணர்வெல்லாம்
.. அலையும் பிணமாய் இருக்கின்றோம் (2)
ஒவ்வோர் தலைக்கும் விலைபேசி
.. உண்மை முடக்கும் விளையாட்டில்
ஒவ்வா வழியில் அவர்நாடும்
.. உதவி யாவும் செய்கின்றோம்;
கவ்விக் கொல்லும் கழுகுகளைக்
.. கனவான் என்றே கருதும்நாம்
தவ்விச் செல்லும் தவளைகளாய்
.. தரத்தால் தாழ்ந்துக் கிடக்கின்றோம் (3)
ஏது மில்லை எனும்வேளை
.. எதையோ செய்யும், ஏமாற்ற
சாதிப் பேச்சை தூண்டிவிடும்,
.. தனியாய் அதனில் குளிர்காயும்;
பேத மில்லை எனும்நாமே
.. பிரிந்தோம், பிரிவின் நிலைப்பாட்டால்
மோதிப் பார்க்கும் மனங்கொண்டோம்,
.. முரணாய் முடங்கிக் கிடக்கின்றோம் (4)
வேண்டும் எண்ணம் புதிதான
.. விளைவை விதைக்கும் விடையாக
வேண்டாம் மேலும் பிரிவேதும்
.. விழைவோம் ஒன்றை, அதுஅன்பே
ஆண்டான் அடிமை அனைவர்க்கும்
.. அதுவே அடைசொல் அடையாளம்
தீண்டாப் பகையும் இனியேது
.. திடமாய் வாழ்வில் இனியேற்றம் (5)
வேண்டும் அன்பே உரையெங்கும்
.. வீட்டின் உறவில் அதுவேண்டும்
வேண்டும் அன்பே நகரெங்கும்
.. வேற்று நாட்டான் உறவெல்லாம்
வேண்டும் அன்பே உலகெங்கும்
.. வெளியோர் கேளிர், தமிழ்கூறும்
மீண்டும் மீண்டும் மொழிகின்றேன்
.. முனைவோம் அன்பே வழியென்றே (6)
