skip to content

நெஞ்சே மயிலை நினை

தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)

-----

அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்
திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சே
எண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிது
திண்ணம் அவன்பாதம் தேடு (1)

-----

தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்
ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சே
தாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில்
காணாத கண்ணன்று கண் (2)
தாணாடு = தாள் + நாடு

-----

கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்
மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சே
கொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்
உள்ளவன் என்றுணர்ந் தோது (3)

-----

ஓதவனை மாதோ டுறைவானை பேருலகில்
ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சே
ஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தை
நாடி அடைதல் நலம் (4)

-----

நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலை
நிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சே
தீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்
கோவனையே உன்நினைவிற் கொள் (5)

-----

கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்
பண்ணொன்றைச் சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சே
ஆற்றுப் பெருக்காய் அரனருள், உன்னகத்தே
நீற்றான்றன் எண்ணம் நிறை (6)
கொண்ணங்கை = கொள் + நங்கை
அண்ணெஞ்சே = அள் + நெஞ்சே

-----

நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்
பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சே
இல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து)
எல்லாம் அவனே என்று (7)

-----

என்றேகும் என்றறியேன் என்பிணைகள் மாமயிலை
சென்றேனும் தீதெலாம் தீருமோ - வன்நெஞ்சே
வந்தோர்க் கருளி வரும்பிணையும் நீக்குமந்த
முந்தையன்றாள் எண்ணி முனை (8)

-----

முனைவோர்க் கருளும் முழுமுதல்வன் ஆடி
அனையேத்தும் மாமயிலை ஐயன் - வினைநெஞ்சே
தொக்குமூழ் அற்றுத் தொடரா நிலைவேண்டி
சொக்கன் பதியிற் றொழு (9)

-----

தொழுவார்க் கருள்கின்ற தோடுடையான் பாதத்(து)
ஒழுகாதார் உண்டோ உலகில் - எழுநெஞ்சே
உன்னை உழற்றும் உறுவினையைத் தீர்க்குங்காண்
அன்பொழுகும் அத்தன் அருள் (10)

-----

அருளன்றி வேறுண்டோ அத்தனவன் தாள்நினைந்துப்
பொருள்காண் பிறப்பில் புதிதாய் - இருள்நீங்க
அஞ்செழுத்தன் அன்பன்றி ஆதரவாய் வேறேது
நெஞ்சே மயிலை நினை

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.