skip to content

இரவல் வாழ்க்கை

இரவல் வாழ்க்கை

தந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
.. தாயவள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
.. முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
.. விளிக்கவோர் பெயரும் சேரும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
.. தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)

ஆவதன் கன்றாய் மாறி
.. அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
.. பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
.. செய்வதும் மரம்மண் தானே (2)

கல்வியை யாரோ ஈவர்,
.. கருத்ததை சேர்த்துப் பார்ப்போம்;
அல்லதும் நலமும் வாழ்வில்
.. அடுத்தவர் கொடுத்துச் செல்வர்;
செல்வமும் இரந்தி ரந்து
.. செலும்வரை சேர்த்த தன்றோ?
இல்லவே இல்லை என்றே
.. இடைவிடா திரந்து வாழ்வோம் (3)

ஊனதன் செல்கள் யாவும்
.. உணவதின் சக்தி ஏற்கும்;
மேனிறம் முன்னோர்த் தோலின்
.. மரபுதன் குணத்தை ஒக்கும்;
தானெனும் செருக்கில் மீசை
.. தழைத்திட உதட்டின் ஓரம்,
நானெனும் எண்ணம் ஏனோ
.. நம்நிலை மறந்து நிற்கும் (4)

வாலிபம் வந்த பின்னே
.. வளர்த்தவர் பெண்ணை ஈவார்;
தாலியாற் சொந்தம் ஆவாள்,
.. தாவென இரப்போம் அன்பை;
கோலமாய் அமைந்த வாழ்வில்
.. குழந்தையை இரந்து கொள்வோம்;
பாலகன் வளரும் போழ்து
.. பார்என இரந்து நிற்போம் (5)

மண்ணதில் வீழ்ந்த போது
.. வளர்ந்திட இரந்த காற்று;
விண்ணவன் மீட்டுச் செல்ல
.. விழைகுவான் கொடுத்த மூச்சை;
கண்ணெதிர் உயிரும் மீளும்,
.. காயமும் மறையும் மண்ணுள்;
உண்மையாய் நமது வாழ்வின்
.. உடமைகள் ஏதும் உண்டோ? (6)

வந்ததன் நோக்கம் என்ன?
.. வரவென ஏதும் இல்லை;
மந்தையாய் வாழ்வோம், மாய்வோம்;
.. மனமெலாம் நிறைந்து நிற்கும்
சிந்தனை என்னும் ஒன்றே
.. சேர்த்ததென் றெண்ணும் வேளை
தந்தவன் அணுகு கின்றான்,
.. தாவெனக் கேட்ப தற்கோ? (7)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.