நானும் வானும்
வெள்ளைக் குழம்பெடுத்து வெளிர்நீல வான்திரையில்
கள்ளைப் பரப்புகின்றான் காவியமாய் கவிஇறைவன்
உள்ளம் அதைக்குடிக்க உணர்விழந்தவ் வொருநொடியில்
துள்ளும் மன அசைவில் தொடர்ந்திடுங் கவிதையிது
காற்றுத் தூரிகையால் கண்கவரும் ஓவியத்தை
ஊற்றிச் செல்கின்றான் உளம்காணும் வழியாவும்;
நேற்று வரைந்ததுவோ நிலையாக இன்றில்லை
மாற்றுக் கவிபாடி மகிழ்விப்பான் தினந்தோறும்
முன்னர் எழுங்கதிரின் முள்ளொத்தக் கிரணங்கள்
குன்றைச் செதுக்கஅதன் கோலத்தில் வரும்மாற்றம்;
தென்றல் தினந்தோறும் திரைமேகத் துணிகொண்டு
கன்னி மலைமகளின் கண்ணொத்தி மைத்தீட்டும்
வட்ட விண்ணோடி வகைவகையாய் விளையாடி
முட்டும் மேகமதன் முன்னோடும் ஒளிக்கீற்று,
சொட்டும் அழகெடுத்துத் துளித்துளியாய்த் தேன்சேர்த்து
கொட்டும் நம்விழியில், கொளுமுள்ளம் பூரிக்கும்
கண்கள் குவளைகளோ, காணும்வான் கள்ளூற்றோ,
எண்ணம் தடுமாற எடுத்தெடுத்து நிரப்புகின்றேன்;
பண்டம் தலைக்கேறப் பார்வைகள் பலவாகி
அண்டம் அனைத்தையுமே அடைக்கின்றேன் ஆழ்மனத்தில்
வானம் ஒன்றதிலே வருங்காட்சி பலகோடி;
நானென் பார்வையினால் நகலெடுத்த தொருகோடி;
ஆன திவைகோடி அண்டமென்றன் ஆழ்மனத்தே;
ஞான மிதுவென்பேன் நான்பெரியன், வானில்லை
ஓடி மறைகின்ற ஒருநிமிட ஓவியங்கள்,
நாடின் அதைப்பின்னர் நாம்காண இயலாதே;
கோடி அவைசேர்த்து கொண்டுள்ளேன் என்னகத்துள்,
தேடும் நிமிடத்தே திரும்பவரும் கண்முன்னே
போதும் இக்கவிதை, பொழுதின்று போவதற்குள்
மோதும் மேகத்தின் முழுவுருவப் படம்வேண்டும்;
யாதும் எனக்கென்றே எழுவானம் அளிக்கையிலே
ஏதும் செயலாமோ இதுவன்றி இனியிங்கே!
